கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து 90களில் சின்ன வாத்தியார் என்று ஒரு படம் வந்தது. அதற்கடுத்து வந்துள்ள படம் போகன்.
ஜெயம் ரவி ஒரு டெர்ரர் போலீஸ் ஆபீசர். அவர் அப்பா நரேன் வங்கி மேனேஜர். அதே ஊரில் செம ஜாலி வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி. வசிய சக்தி கைவரப் பெற்றவர். ஒரு நகைக் கடை வாசலில் காரை நிறுத்தி உற்றுப் பார்க்கிறார்... கடை சிப்பந்தி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார். அப்படி ஒரு சக்தி.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. முன் பின் தெரியாத ரவியை எப்படி திருமணம் செய்வது என யோசிக்கிறார் ஹன்சிகா. ஆனால் ரவியின் நல்ல குணம் புரிந்து மணக்க சம்மதிக்கிறார். அந்த சூழலில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவியின் தந்தையை வசியம் செய்து, அவர் மூலம் வங்கியிலிருந்து பெரும் பணத்தை ஆட்டயப் போடுகிறார். பணத்தைக் கொள்ளையடித்ததாக நரேன் மீது பழி விழுகிறது. இதனால் ஜெயம் ரவி - ஹன்சிகா திருமணம் தடைப்பட்டு நிற்கிறது. விசாரணையில் இறங்கும் ரவி, அர்விந்த்சாமியை நெருங்கி விசாரிக்கிறார். அப்போது கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைப் பயன்படுத்தி ஜெயம் ரவி உடம்புக்குள் புகுந்து விடுகிறார். அரவிந்த்சாமி உடம்பில் ஜெயம் ரவி வந்துவிட ஏக குழப்பங்கள். இதிலிருந்து ஜெயம் ரவி எப்படி மீள்கிறார்? ஹன்சிகாவை எப்படி திருமணம் செய்கிறார்? அரவிந்த்சாமியை எப்படி சிறைப்படுத்துகிறார்? என்பதெல்லாம் மீதிக் கதை.
ஏழாம் அறிவில் நோக்கு வர்மம் மாதிரி, போகனில் சித்த வர்மம். அர்விந்த்சாமிக்கு டைட்டில் ரோல். அவர்தான் போகன், அனுவித்துச் செய்திருக்கிறார் இந்த வேடத்தை. ஜெயம் ரவிக்கு தன் நடிப்பை வெளிப்படுத்தக் கிடைத்த இன்னொரு நல்ல வாய்ப்பு போகன். குறிப்பாக அரவிந்த்சாமி உடம்புக்குள் போனபிறகு ஜெயம் ரவியின் உடல் மொழியில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் அவர் நடந்து கொள்ளும் விதம் பிரமாதம். குறிப்பாக ஹன்சிகாவுடனான அவரது காதல் காட்சிகள் ரொம்பப் புதுசு.
ஹன்சிகாவுக்கும் இதில் நல்ல வேடம். குடித்துவிட்டு கலாட்டா செய்யும் காட்சிகளில் கவர்கிறார். கூடு விட்டுக் கூடு பாய்ந்த பிறகு, ஜெயம் ரவி உடம்பில் உள்ள அர்விந்த்சாமியை அவர் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யம்.
நாசர், பொன்வண்ணன், வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா கவுடா என நடித்த அனைவருமே கச்சிதம். சௌந்திரராஜனின் கேமரா, இமானின் இசை இரண்டும் படத்துக்கு பலம். பாடல்களை விட, பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் இமான்.
இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் டல்லடிப்பதை கவனித்து கத்தரி போட்டிருக்கலாம் இயக்குநரும் எடிட்டரும். பொதுவாக இரண்டாவது படத்தைக் கோட்டை விடுவார்கள் இயக்குநர்கள். ஆனால் லக்ஷ்மன் அதில் ஜெயித்திருக்கிறார். திரைக்கதை, படமாக்கம் இரண்டிலுமே சோடை போகவில்லை.
Post a Comment